maduranthaham lake full secon time

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி ஏற்கனவே நிரம்பி வழிந்த நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தற்போது இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. இதையடுத்து முதராந்தகத்தை அடுத்துள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி வட கிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியதில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகளும் நிரம்பின. மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பி வழிந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது.இதன் காரணமாக கிளியாறு வழியாக மதுராந்தகம் ஏரிக்கு 9 ஆயிரத்து 800 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 23.3 அடியைத் மீண்டும் தாண்டியது.

இதனால் ஏரியில் இருந்து 8 ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களில் மதுராந்தகம் ஏரி நிரம்புவது இது இரண்டாவது முறையாகும். தொடர்நது நீர்வரத்து அதிகரித்து வருவதால் கத்திரிச்சேரி, முள்ளி, வளர்பிறை, விழுது மங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது..