மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அதிமுக மத்திய அரசின் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததற்கு நாடாளுமன்ற ஆவணங்கள் சாட்சி என முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சியாக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்த விவகாரம் தமிழகச் சட்டபேரவையிலும் எதிரொலித்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுகவின் விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸில் ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

"மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது! மதுரை டங்ஸ்டன் (#Tungsten) விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” எனத் திரு. தம்பிதுரை அவர்கள் மழுப்பி இருக்கிறார்.

அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது. டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் திரு. தம்பிதுரை ஆதரித்தார்.

வியூஸ் அள்ளும் வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்! எவ்வளவு சம்பாதிக்கிறாங்க தெரியுமா?

Scroll to load tweet…

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.

அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது. திரு. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை? மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற?

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

மத்திய அரசின் இந்த டங்கஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நடைபெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் ஆரம்பத்திலேயே இத்திட்டத்தைத் தடுத்திருக்கலாம் என்றார்.

அதனை மறுத்த அவை முன்னவர் துரைமுருகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் தமிழக அரசு எடுத்த முயற்சிகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில்தான் இப்போது இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றனர். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுமானால் தான் முதல்வர் பதவியிலேயே இருக்கமாட்டேன் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!