களைகட்ட தயாராகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்; சித்திரை திருவிழா வருகிற 28-ஆம் தேதி தொடக்கம்…
வருகிற 28-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.
பன்னிரண்டு மாதங்களும் திருவிழா நடைபெரும் ஒரு கோவில் என்றால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்தான். அதிலும், சித்திரை, ஆடி, ஆவணி, புராட்டாசி, பங்குனி திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 28–ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி மே மாதம் 9–ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.
பின்னர், அங்கு எழுந்தருளும் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.
இந்த விழாவையொட்டி தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சியும், சுந்தரேசுவரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாசிவீதிகளை வலம் வருவர். இதனை அடியார்கள் கண்டு பரவசம் அடைவர்.
மீனாட்சி அம்மனுக்கு திருமுழுக்கு நிகழ்ச்சி மே மாதம் 5–ஆம் தேதி அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 6.55 மணிக்கு மேல் 7.19 மணிக்குள் நடக்கிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 7–ஆம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடிவீதியில் உள்ள மண்டபத்தில் நடக்கிறது. திருக்கல்யாணத்தை காணவரும் அடியார்களுக்கு பந்தல் அமைக்கும் பணி தற்போது ஆடி வீதிகளில் நடந்து வருகிறது.
சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் பந்தல் அமைக்கப்படுகிறது. 8–ஆம் தேதி தேரோட்டமும், 9–ஆம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூசையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.