மதுரை ஆதீனமா? நீங்களா? வாபஸ் வாங்கலனா அவ்ளோதான்..! நித்யானந்தாவிற்கு கோர்ட் எச்சரிக்கை..!
தன்னை மதுரை ஆதீனம் எனக் குறிப்பிட்டு மனு செய்த நித்யானந்தாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, பிரமாண பத்திரத்தை திரும்பப் பெறாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சட்டவிரோத ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை மதுரை ஆதீன மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி மகாதேவன், மதுரை ஆதீன விவகாரத்தில் தலையிடவும், மடத்திற்குள் நுழையவும் ஏற்கனவே நித்யானந்தாவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன்னை 293வது ஆதீனம் என நித்யானந்தா குறிப்பிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மனுவை திரும்ப பெறாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ஆதின மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என உத்தரவிட்டார்.