உளுந்தூர்பேட்டையில் மதுரை ஆதீனத்தின் கார் விபத்து குறித்து காவல்துறையின் அறிக்கையை ஆதீனம் மறுக்கிறது. எதிர்த்தரப்பு வாகனம் பற்றிய முழு விவரங்களையும் காவல்துறை மறைப்பதாகவும், அறிக்கை ஒருதலைபட்சமாக உள்ளதாகவும் ஆதீனம் குற்றம் சாட்டுகிறார்.

Madurai Adheenam car accident : மதுரை ஆதினம் தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக பரபரப்பு குற்றம்சாட்டிய நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சியை போலீசார் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து ஆதினம் கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மதுரை ஆதினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 02.05.2025 அன்று காலை உளுந்தூர்பேட்டை ரவுண்டானத்தில் நடந்த சம்பவம் தொடர்பான காவல்துறையின் உண்மைக்கு புறம்பான விளக்க அறிக்கையை மறுக்கின்றோம். கார் விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் இதுவரை எந்தவித புகாரையும் தெரியப்படுத்தவில்லை என காவல்துறை அறிக்கையில் பார்த்தோம். சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே சரியாக காலை 09.42 மணிக்கு காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100க்கு கால் செய்யப்பட்டு உடனடி தகவலை பரிமாற்றி விட்டோம்.

மதுரை ஆதினம் கார் விபத்து- காவல்துறையிடம் உடனடியாக புகார்

அதன் பிறகு காலை 10.09க்கு காவல் உளவு பிரிவு அதிகாரிக்கு தகவலை தெரிவித்தும் காலை 11.47 மணிக்கு உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் பேசியும் இந்த சம்பவம் தொடர்பாக பலமுறை உள்ளூர் காவல்துறை அதிகாரியிடம் பேசிக் கொண்டும் இருந்தோம். மாலை 5.39 மணிக்கு உளவுத்துறை DSP அவர்களும் எங்களை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார்.

நாங்கள் சென்ற சாலையில் எந்தவித தடுப்புகளும் இன்றி சாலை சீராக இருந்தது. சேலம் To சென்னை சாலையில் தற்காலிக தடுப்புகள் இருந்தும் கூட மிக வேகமாக வந்து எங்களுடைய வாகனத்தில் மாருதி சுசுக்கி வாகன மோதியது சம்பவ இடத்தில் நாங்கள் பார்க்கும் பொழுது எதிரில் வந்த வாகனத்திற்கு பதிவு எண் போர்ட் இல்லை, இரண்டு இஸ்லாமியர்கள் மட்டும் வாகனத்தில் இருந்தனர். காவல்துறை தொடர்பு கொண்டு இருக்கின்றோம் என்று தெரியப்படுத்திய உடன் உடனடியாக சம்பவத்தை விட்டு அவர்கள் நகர்ந்து விட்டார்கள். சம்பவம் நடந்து 26 மணி நேரம் கழித்தும் எந்தவித தகவலையும் காவல்துறை தெரிவிக்காததால் எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுந்தது.

காரில் எண் பொருத்தப்படாதது ஏன்.? மதுரை ஆதினம்

எதிர் மாநாட்டு மேடையில் மதுரை ஆதீனம் குரு மகா சந்நிதானம் அவர்கள் இது சதியாக இருக்கும் என்று பேசிய உடனே மிகப்பெரிய பரபரப்பாக பேசப்படது.சம்பவம் தொடர்பான உண்மைத்தன்மை அறிக்கையை காவல்துறை 03.05.2025 அன்று இரவு வெளியிட்டது. எங்களை பற்றியும் எங்கள் தரப்பு வாகனத்தைப் பற்றியும் முழு விவரங்களை தெளிவாக காவல்துறை அறிவித்தது. எதிர்த்தரப்பு வாகனத்தை பற்றியும் அவருடைய விவரங்கள் பற்றியும் தடுப்புகளைத் தாண்டி அவர்கள் மோதியதை பற்றியும் பதிவு எண் பொருத்தப்படாத வாகனமாக நாங்கள் குற்றம் சாட்டியத்தை பற்றியும் ஒரு இடத்தில் கூட காவல் துறை பதிவு செய்யப்படாது வருத்தம் அளிக்கிறது.

விபத்து தொடர்பாக 15 முறை போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது

முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து எங்களிடம் அளித்த நகலை பார்த்தோம். 02.05.2025 நடந்த விபத்திற்கு 04.05.2025 அன்று முபாரக் அலி S/o. அப்துல்லா என்பவர் புகார் அளித்ததாகவும் அதன் அடிப்படையில் இரு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அறிந்தோம். அவசர அழைப்பு 100-க்கு கால் செய்து முறையாக முதலில் பதிவு செய்தது நாங்கள். ஆனால் காவல்துறையிடம் எந்தவித புகார் மதுரை ஆதீனம் சார்பாக பெறப்படவில்லை என்பது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது. 15க்கு மேற்பட்ட முறை காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி

இது பற்றியன விளக்கங்களைக் கேட்டு அறிந்தும் கூட முழு தவறு மதுரை ஆதீனம் பக்கம் தான் இருக்கிறது என்பது போல தோற்றம் உருவாகியுள்ளது வேதனை அளிக்கிறது. அந்த மாருதி சுசுகி வாகனத்தில் இருவர் மட்டுமே பிரயாணம் செய்து வந்தார்கள். ஆனால் முதல் தகவல் அறிக்கையில். குடும்பத்தோடு சென்றோம் என்ற தவறான தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறையின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையது

மேலும் பக்கவாட்டில் வேகமாக வந்து மோதியதனை மறைக்கும் வண்ணம் சீராக இருந்த சாலையில் பயணித்த நாங்கள்தான் விபத்து ஏற்படுத்தி விட்டோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. விபத்து நடந்த அடுத்த நிமிடமே காவல்துறையிடம் முறையாக தகவல் தெரிவித்து தொடர்ந்து அதைப் பற்றி விவரத்தை தெரிந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். காவல்துறை எதிர் தரப்பினர் பற்றி விவரத்தை தொடர்ந்து எங்களுக்கு அளிப்பதை மறுத்து வந்தது சந்தேகத்துக்கிடமானது.

மீண்டும் எதிர் தரப்பில் இருவர் மட்டும் பயணித்து வந்த வாகனத்தில் குடும்பத்தோடு பயணம் செய்து வந்த வாகனம் என்று சொல்லி இருப்பது மேலும் வேதனை அளிக்கிறது.முன்னுக்கு பின் முரண்பாக அமைந்துள்ள காவல்துறையின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாக நாங்கள் கருத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.