மதுரை ஆதினத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

High Court Orders Police Not To Take Action Against Madurai Adheenam: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது மதுரை ஆதினம் கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் எந்தவித காயமுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பிய மதுரை ஆதினம் விபத்துக்குள்ளான காரிலேயே சென்னை சென்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

குறிப்பிட்ட மதம் மீது குற்றம்சாட்டிய மதுரை ஆதினம்

குல்லா அணிந்த ஒருவர் தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குறிப்பிட மதத்துக்கு எதிராக மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இது தற்செயலாக நிகழ்ந்த விபத்து என்றும் மதுரை ஆதீனத்தை கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

மதுரை ஆதினத்துக்கு எதிராக புகார்

இதன்பிறகு சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலிங்கம், ''தன்னை கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதினம் பொய் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதன்மூலம் இரு மதத்தவர்கள் இடையே வெறுப்புணர்வு, பகை உணர்வை தூண்டுகிறார். இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். மதநல்லிணக்கத்தை சீர்க்குலைக்கும். இதனால் பொய்களை கூறிய மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சென்னை மாநகர ஆணையருக்கு புகார் மனு அனுப்பி இருந்தார்.

4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

மேலும் திமுக கூட்டணி கட்சிகளும் மதுரை ஆதினத்துக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்தனர். இதன்பின்னர் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், இருபிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளில் கீழ் மதுரை ஆதினம் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை ஆதினத்திடம் விசாரணை

இதனைத் தொடர்ந்து மதுரை ஆதினம் மடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த படுக்கையில் வைத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது மதுரை ஆதினம் சரியாக ஒத்துழைக்காததால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சைபர் கிரைம் போலீஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யக்க்கோரி மதுரை ஆதினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் மதுரை ஆதீனத்தின் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.