Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Madras HC seeks reply from enforcement directorate on senthil balaji bail case smp
Author
First Published Oct 11, 2023, 6:47 PM IST

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே, இந்த வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என குழப்பம் நீடித்து வந்தது. இது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொய் கூறும் தங்கம் தென்னரசு: அண்ணாமலை கண்டனம்!

அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்  தர கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள செந்தில் பாலாஜி மீண்டும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறி அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த மருத்துவ அறிக்கையை அமலாக்கத் துறைக்கு அளிக்க அறிவுறுத்திய நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை வருகிற 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios