நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

நெல்லையைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் அவர் தொடர்ந்த வழக்கில், தனக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களும், பதவி உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனே வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை கடந்த 2018ஆம் ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஞானபிரகாசத்துக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்களை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதனால், 2020ஆம் ஆண்டு ஞானபிரகாசம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

ராமதாஸ், அன்புமணி ராமதாசை ஒருமையில் வசைபாடிய வன்னியர் கூட்டமைப்பு தலைவர்

இந்த வழக்கில் அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ் ஆஜரானார். அவருக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், உத்தரவை உடனடியாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோதும், நீதிமன்றம் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியது.

தொடர்ந்து, இந்த வழக்கானது நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஞானபிரகாசம் வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு 2 வார சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.1000 அபராதமும் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.