“நளினிக்கு பரோல் வழங்கலாமா?” - தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!
மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்கவும், திருமணத்தை நடத்தி வைக்கவும் தன்னை பரோலில் விட வேண்டும் என ராஜிவ் கொலையாளி நளினியின் மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரதவிட்டுள்ளது.
முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இவர்கள், தங்களை விடுதலை செய்யக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தார். ஆனால், மத்திய அரசு அரசு அதற்கு தடை விதித்தது.
இதைதொடர்ந்து பேரறிவாளனின் தாய், நீதிமன்றம் மற்றும் பிரதமர், குடியரசு தலைவர், முதலமைச்சர் என பலரையும் சந்தித்து, தனது மகனை பரோலில் விடும்படி கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், இதுவரை எந்த பலனும் இல்லாமல் உள்ளது.
இந்நிலையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில், தன்னை பரோலில் விடும்படிபடி கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.
அதில், சிறையில் அடைக்கப்பட்டபோது, தனக்கு பெண் குழந்தை பிறந்தது. 2 வயது வரை தன்னுடன் இருந்த குழந்தை, பின்னர் லண்டனில் உள்ள பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறது. தற்போது, தனது மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும்.
இதனால், வரும் நவம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் தனக்கு பரோலில் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். தனது மகளின் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதில், கலந்து கொண்டு, மகள் திருமணத்தை நடத்தி வைக்க விரும்புவதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி,நளினியின் கோரிக்கை மனுவுக்கு, வரும் ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.