கொரோனாவின் 4 ஆவது அலை அண்டை நாடுகளில் பரவி வருவதால் தமிழ்நாடு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கொரோனாவின் 4 ஆவது அலை அண்டை நாடுகளில் பரவி வருவதால் தமிழ்நாடு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்வதற்காக கன்னியாகுமரிக்கு சென்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு 100க்கும் குறைவாக உள்ளது. இறப்பு பூஜ்யம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா 4 ஆவது அலை தீவிரமாக பரவி வருகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட 740 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி இறப்பு 59 பேர் என உள்ளது. எனவே தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். கொரோனா 4 ஆவது அலை தமிழகத்தில் பரவும். எந்தத் தகவலையும் நாம் அலட்சியப்படுத்தி விட முடியாது. தமிழ் வழிக்கல்விக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

மருத்துவ படிப்பை தமிழ் வழியில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் தொடர்ந்து மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக மத்திய அரசு மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலந்து போன்ற நாடுகளில் உக்ரைனிலுள்ள பாடத்திட்டமே மருத்துவப் படிப்பில் உள்ளதால், சில மாணவர்கள் போலந்தில் கல்வி கற்க விரும்புகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு மூலமாக நாங்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார். சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவின் அண்டை மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருவது தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.