லாரி ஸ்டிரைக் எதிரொலி; ரூ.400 கோடி நட்டத்தால் மூடப்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள்; 6 இலட்சம் பேர் பாதிப்பு...
தூத்துக்குடி
லாரிகளின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு ரூ.400 கோடி நட்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டன.
இந்தத் தொழிற்சாலைகளில் தயாரிகக்ப்படும் தீப்பெட்டிகள் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படாமல் 2 இலட்சம் த்ப்பெட்டி பண்டல்கள் இங்கேயே தேங்கி கிடக்கின்றன. இதனால், தீப்பெட்டி தொழில் மற்றும் அதனைச் சார்ந்த தொழில் செய்வோருக்கு ரூ.400 கோடி வரை நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், "வெள்ளிக்கிழமை (அதாவது இன்று) முதல் தீப்பெட்டித் தொழிற்சாலைகளை மூடுவது" என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று முதல் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் கைவிடப்படும் வரை தொழிற்சாலைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனால், தீப்பெட்டித் தொழிற்சாலையை நம்பியுள்ள 6 இலட்சம் பேர் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.