மின்னல் வேகத்தில் மோதிய லாரி; டிராக்டரில் வந்த இருவர் சாவு; லாரி ஓட்டுநர் கைது...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் மின்னல் வேகத்தில் வந்த லாரி, டிராக்டர் மீது மோதியதில் ஆந்திராவை சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து மாங்காய்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், சித்தேரிமேடு என்ற இடத்தில் டிராக்டர் வந்துக் கொண்டிருந்தபோது வேலூரில் இருந்து சென்னைக்கு சென்றுக் கொண்டிருந்த லாரி, டிராக்டரின் பின்பக்கத்தில் மின்னல் வேகத்தில் மோதியது.
இதில், டிராக்டரில் வந்த ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த ரேணுகா (35), ஆந்திர மாநிலம் சித்தூர் கொட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (60) ஆகியோர் சம்பவ பலத்தகாயம் அடைந்தனர்.
இதில் ரேணுகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமகிருஷ்ணன் ஆபத்தான நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பாலுச்செட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் பிரபாகர் வழக்குப்பதிந்தார். விபத்தை ஏற்படுத்திய திருவண்ணாமலையை சேர்ந்த லாரி ஓட்டுன்நர் சதீஷை (30) காவலாளர்கள் கைது செய்தனர். c