Lorry driver died in accident tanker got fired
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஜல்லிக் கற்களை ஏற்றி சென்ற லாரி முன்னாள் சென்ற வாகனத்தில் மோதி கவிழ்ந்ததில் டீசல் டேங்கில் தீப்பிடித்ததில் ஓட்டுநர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம், மாங்காடு அடுத்த கோவூர், முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (23). லாரி ஓட்டுநரான இவரது மனைவி ஜான்சிராணி (20), இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரமேஷ் தாம்பரத்தில் இருந்து ஜல்லிகற்களை ஏற்றிக் கொண்டு மீஞ்சூர் நோக்கி லாரியில் வந்துக் கொண்டிருந்தார். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, வடக்கு மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் பொக்லைன் எந்திரம் ஏற்றிச் சென்ற லாரியின் பின்பகுதியில் இவரது லாரி உரசியுள்ளது. இதில், ரமேஷின் லாரி கவிழ்ந்தது.
இதில் பலத்த காயங்களுடன் லாரியில் சிக்கிய ரமேஷ் வெளியே வர முடியாமல் மயக்கம் அடைந்தார். பின்னர், டீசல் டேங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனால், லாரி ஓட்டுநர் ரமேஷ் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலாளர்கள் கருகிய நிலையில் இருந்த ரமேஷ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லாரியும் அந்தப் பகுதியில் இருந்து அப்புறப் படுத்தப்பட்டது.
