Asianet News TamilAsianet News Tamil

ஷாக் அடித்து இறந்துபோன லாரி ஓட்டுநர்; இழப்பீடு கேட்டு உறவினர்கள் சடலத்துடன் போராட்டம்...

lorry driver dead by shock Relatives protest asking compensation ...
lorry driver dead by shock Relatives protest asking compensation ...
Author
First Published Jun 20, 2018, 1:32 PM IST


நாமக்கல்

நாமக்கல்லை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆந்திராவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவரது குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், அணியாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (37). லாரி அதிபரான இவரே அந்த லாரியை ஓட்டியும் வந்தார். 

கடந்த 11-ஆம் தேதி சென்னையில் இருந்து லோடு ஏற்றிச் சென்ற வெங்கடேஷ், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சென்றார். அங்கிருந்து லோடு கிடைப்பதற்காக காத்திருந்தார் வெங்கடேஷ். 

இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி அவர் தங்கியிருந்த அலுவலகத்தில் குளிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. அதன்பின்னர் அங்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு, வெங்கடேஷின் உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

இறந்துபோன வெங்கடேஷின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது உறவினர்கள் அவசர ஊர்தியில் உடலை நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கத்துக்கு கொண்டுவந்தனர். 

சங்க அலுவலக வளாகத்தில் அவசர ஊர்தியை நிறுத்திவிட்டு இழப்பீடு கேட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சங்க தலைவர் சுந்தர்ராஜன், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி, தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, "இறந்துபோன வெங்கடேஷ் சங்கத்தின் நிரந்தர உறுப்பினராக இருந்தால் ரூ.10 இலட்சம் வரை இழப்பீடு பெற்று தர முடியும்" என்று அவர்கள் கூறினர். தற்காலிக உறுப்பினராக இருந்தாலும் வெங்கடேஷின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதியளித்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios