சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளில் இருந்து மேலும் ஒரு பெட்டகம் மீட்பு...
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பாதுகாப்பு பெட்டகங்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு பாதுகாப்பு பெட்டகம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த பெட்டகத்தில் தங்கம், வைர நகைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் தரை தளத்தில் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வந்தது.
இந்த கட்டடத்தில் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், கட்டடம் முற்றிலும் சேதமடைந்தன. மேலும் ஜூன் மாதம் 20 ஆம் தேதி கட்டடம் முற்றிலுமாக இடிக்கப்பட்டது.
கட்டடம் அகற்றும் பணியின்போது, 6 வது மாடியில் இருந்து ஒரு பெட்டகமும், தரைத்தளத்தில் இருந்து 2 பாதுகாப்பு பெட்டகங்களும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட பெட்டகம் 200 டிகிரி வெப்பம் வரை தாங்கக்கூடியது என கூறப்படுகிறது.
அவற்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாயும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளில் இருந்து மேலும் ஒரு பெட்டகம் மீட்கப்பட்டுள்ளது. இந்த பெட்டகத்தில் தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.