பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்...
கடலூர்
கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளனம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், திருமுருகன், மாவட்ட துணைத்தலைவர் சீனுவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி தினக்கூலியாக 509 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்,
பேரூராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு 432 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.