இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் இல்லையாம் ; தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 4-வது முறையாக நீட்டிப்பு
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வார்டு வரையறை செய்யும் பணி நிறைவடையாததால் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் அமைச்சர் வேலுமணி நிறைவேற்றினார். மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் மசோதாவில் கூறியுள்ளார்.
2018 டிசம்பர் 31-ம் தேதி வரை தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர் பதவிக்காலத்தை மேலும் நீடிக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 26-ல், தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டது.
ஆனால் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்ததால், வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது. இதனையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போதுள்ள சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.