பாலிசிகளுக்கான போனஸ் விகிதத்தை உயர்த்திக் கேட்டு எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்…
திருவாரூர்
பாலிசிகளுக்கான போனஸ் விகிதத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் மாரி முத்து தலைமை வகித்தார். கோட்டச் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கோட்டச் செயலாளர் கருணாநிதி பேசினார்.
இந்த் ஆர்ப்பாட்டத்தில், “எல்.ஐ.சி. பிரிமியங்கள் மற்றும் தாமதமாக கட்டப்படும் பிரிமியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
பாலிசிகளுக்கான போனஸ் விகிதத்தை உயர்த்த வேண்டும்.
எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும்.
பாலிசி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் கோட்டச் செயற்குழு உறுப்பினர் விஜயராஜ், மாவட்டப் பொருளாளர் அறிவழகன், மாவட்டத் துணைத் தலைவர் பிரசாத், கிளைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி, கிளைச் செயலாளர் செந்தில்குமார், கிளைப் பொருளாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.