Asianet News TamilAsianet News Tamil

உஷார்.. ! பேருந்துகளில் மாணவர்கள் தொங்கினால்.. ! இனி இது தான் தண்டனை.. சென்னை காவல்துறை அதிரடி..

சென்னையில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 154 மாணவர்களின் பெற்றோர்களுக்கு காவல்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
 

Letter to parents of students hanging on the stairs on buses - Chennai Police Action
Author
Chennai, First Published Apr 20, 2022, 11:43 AM IST

சென்னையில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 154 மாணவர்களின் பெற்றோர்களுக்கு காவல்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.தமிழகம் முழுவதும் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு  ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நடைமுறை அதிகரித்துள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் மாணவர்களுக்கும் நடத்துனர், ஓட்டுநனர்களுக்கும் இடையே பல்வேறு மோதல்களும் நிகழ்வது வாடிக்கையாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை சில வழிதடங்களில் மாணவர்களின் அட்டூழியங்கள் தாங்க முடியாமல், பேருந்துகளை இயக்காமல் ஓட்டுனர்கள் போராட்டங்களும் நடத்தி உள்ளனர்.

இதுக்குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, சென்னை முழுவதும் போக்குவரத்துத்துறை போலீசார், அரசு பேருந்துகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பேருந்துகளில் ஆபத்தான முறையில் தொங்கிய படி பயணம் செய்து பள்ளி, கல்லூரி மாணவர்களை பிடித்து எச்சரித்து அறிவுரை வழங்கப்பட்டது. 

பின்னர் மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி, வகுப்பு உள்ளிட்ட விவரங்களை வாங்கிக்கொண்டனர். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியின் முதல்வர், அவர்களது பெற்றோருகளுக்கும் படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்தது குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் 111 பள்ளி மாணவர்கள்,  43 கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 154 மாணவர்கள் குறித்து கடிதம் அனுப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதே போல், பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறி மாணவர்களை ஏற்றி வந்த 60 பேருந்து ஓட்டுநர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரவு நேரங்களில் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் பைக் ரேசில் ஈடுபடும் சம்பவங்கள் குறித்து சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களின் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஆபத்தான முறையில் பைக் ரேஸ் செய்யும் இளைஞர்களின் பெற்றோர்களுக்கு கடிதமும் சென்னை காவல்துறை மூலம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios