எப்படி ஆறுதல் கூற வேண்டும் என்ற பண்பை, விஜய்யிடம் கற்று கொள்ளுங்கள் ரஜினி ; இயக்குனர் அமீர் அறிவுரை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மக்கள் நடத்திய போராட்டடதில், 13 பொது மக்கள் உயிரை, காவல் துறையின் துப்பாக்கி குண்டுகள் பறித்தன. இந்த சம்பவத்திற்கு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்ததோடு நில்லாமல், நேரில் சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலும் கூறினர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கமலஹாசன், ஓபிஎஸ், திருமாவளவன், ரஜினிகாந்த் போன்ற பலரும் தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினர். இவர்கள் ஆறுதல் கூறியது ஊடகங்களின் வெளிச்சத்தில் ஒளிபரப்பானது. மேலும் இவர்களின் சந்திப்பு சம்பிரதாயமான சந்திப்பாகவும் இருந்தது. ஆனால் நடிகர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானோரின் வீடுகளுக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.
ஊடகங்களுக்கு தெரியாமல் தன்னுடைய வருகை ரகசியமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, நள்ளிரவில் அங்கு சென்றிருக்கிறார் விஜய். தனது ரசிகர் ஒருவரின் பின் அமர்ந்து அவர் பாதிக்கப்பட்டோரின் வீட்டிற்கு சென்ற வீடியோ, இப்போது இணையத்தில் பிரபலமாகி இருக்கிறது. அது கூட விஜய்க்கு தெரியாமல் எடுக்கப்பட்டது தான்.
மேலும் விஜய் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றபோது, தரையில் அமர்ந்து, அவர்களோடு ஒருவராக மாறி, தன்னுடைய சொந்த பந்தங்களுக்கு ஒருவர் எப்படி ஆறுதல் சொல்லுவாரோ, அப்படி ஆறுதல் சொல்லி இருக்கிறார். இது பற்றி அங்கிருந்த நபர் ஒருவர் கூறுகையிலும் ”எங்க சொந்த மகன் மாதிரி இருந்தது, விஜய் தம்பி இங்கு வந்து எங்களுக்கு ஆறுதல் கூறியபோது” என தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பிரபல இயக்குனர் அமீர் கூறுகையில், துக்கத்தில் இருப்பவர்களுக்கு எப்படி ஆறுதல் கூற வேண்டும் என்ற பண்பை, நடிகர் விஜயிடம் இருந்து ரஜினி போன்றோர் கற்று கொள்ள வேண்டும். என தெரிவித்திருக்கிறார்.