தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அரசு சார்பில் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதைதொடர்ந்து, இன்று அதிகாலை முதல் போலீசார் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் இருந்த அனைவரையும் அகற்றி வருகின்றனர். இதையொட்டி பல இடங்களில் தடியடி சம்பவமும் நடந்து வருகிறது. இதேபோல், சென்னை மெரினா கடற்கரையில் திரண்டு இருந்த லட்சக்கணக்கானோரை போலீசார், வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மெரினா கடற்கரையில் இருந்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. மெரினாவில் இருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை அறிந்ததும், மெரினாவுக்கு சென்று மாணவர்களிடம் சமரசம் பேச இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகர் லாரன்ஸ் ஆகியோர் சென்றனர். ஆனால் மெரினாவை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், அங்கு அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் அவர்களால் பேசவும் சந்திக்கவும் முடியாமல் ஆனது.

மெரினாவுக்கு செல்வதற்கான சென்னை நகரின் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், என்னால் அந்தப் பகுதியில் செல்லமுடியவில்லை என்று ஜி.வி.பிரகாஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நடிகர் லாரன்ஸ், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும், இன்று காலை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கலைக்கப்படுவதை அறிந்ததும், மருத்துவமனையில் இருந்து வெளியேறி அங்கு சென்றார். ஆனால் அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், தனது செல்போன் மூலம் வீடியோ பதிவை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.

“அதில், மாணவர்கள் யாரும் கடலில் இறங்க வேண்டாம். நமக்கு உயிர்தான் முக்கியம். நான் ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்துவிடுவேன். யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்” என கூறியுள்ளார்.