பெண்களை கிண்டல் செய்த சட்டக் கல்லூரி மாணவர்கள் - தட்டிக் கேட்ட டிராபிக் போலீசுக்கு அடி,உதை.. ஏ.சிக்கு மண்டை உடைப்பு..
சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர் அவ்வழியாகச் சென்ற பெண்களை கிண்டல் செய்துள்ளனர். இதை அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் தட்டிக் கேட்டதால் மாணவர்கள் அவருக்கு அடி,உதை கொடுத்து விரட்டிவிட்டனர்.
சென்னை மில்லர் சாலையில் பெண்களை கேலி செய்த சட்டக் கல்லூரி மாணவர்களை டிராபிக் போலீசார் ஒருவர் தட்டிக் கேட்டுள்ளதால் அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டது..இது மோதலாக மாறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சட்ட கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு விசாரிக்க வந்த போலீசாருடன் சக சட்டக்கல்லூரி மாணவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அப்போது இரு தரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அயனாவரம் காவல் உதவி ஆணையர் சங்கரன் என்பவரை சட்ட மாணவர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இதில் அவர் மண்டை உடைந்தது. மேலும் 2 ஏட்டுகளை மாணவர்கள் அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
கல்வீசி தாக்கியதாக மூன்று சட்ட மணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான மாணவர்களை விடுவிக்க கோரி சக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சம்பவத்தையடுத்து கல்லூரி விடுதி முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்று தேர்வுகள் நடைபெறுவதால், போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.