திருச்சி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதற்கு வரிசையில் வரச்சொன்ன ஊழியரை சட்டக்கல்லூரி மாணவி ஆபாச வார்த்தைகளில் திட்டியதோடு கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் வில்லியம் சார்லஸ் (வயது 44). இவர் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி கிரிஜா என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து வந்துள்ளார்.
மருத்துவ பணியாளர்களிடம் உடனடியாக அவருக்கு ஸ்கேன் எடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு வில்லியம் சார்லஸ், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் காத்திருக்கின்றனர். வரிசைப்படி தான் ஸ்கேன் எடுக்க முடியும் ஆகவே வரிசையில் வாருங்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிரிஜா ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு வில்லியம் சார்லசை காலால் எட்டி உதைத்தார்.
இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது குறித்து வில்லியம் சார்லஸ் கொடுத்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் கிரிஜா மீது பொது இடத்தில் ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
