அவங்கள தூக்கி ஜெயில்ல போடுங்க…. கண்ணீர்விட்டு கதறி அழுத பெண் என்ஜினியர் !!
தன்னை இரும்பிக் கம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்ளை சும்மாவிடக் கூடாது என்றும் சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்றும் படுகாயமடைந்த பெண் கம்ப்யூட்டர் என்ஜினியர் கதறி அழுதார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லாவண்யா என்ற இளம்பெண் நாவலூரில் உள்ள கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த திங்கட்கிழமை அவர் பணிமுடிந்து பெரும்பாக்கம் நுக்கம்பாளையத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டு டூ வீலரில் நாவலூரை அடுத்த தாழம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.
ஒட்டியம்பாக்கம்-அரசன்கழனி- காரணை சாலையில் சென்றபோது இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த வழிப்பறி கும்பல் ஒன்று லாவண்யாவை மடக்கி சாலையோர முட்புதருக்குள் இழுத்துச் சென்றனர்.
பின்னர் அந்த பெண்ணை இரும்பு கம்பியால் தலையில் கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்த அவரிடம் இருந்து நகைகள், செல்போன் மற்றும் டூ வீலரை எடுத்துக் கொண்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றது.
சாலையோரத்தில், ரத்த வெள்ளத்தில் கிடந்த லாவண்யாவை ரோந்து போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, செம்மஞ்சேரியில் உள்ள மதுபான கடையில் நின்று கொண்டிருந்த லாவண்யாவின் டூ வீலரை நேற்று போலீசார் மீட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாவண்யாவுக்கு சுயநினைவு திரும்பியது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தன்னை இரும்பு கம்பியால் தாக்கி இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கொள்ளையர்களை சும்மா விடக்கூடாது என்றும், . தனக்கு நடந்ததுபோல் வேறு யாருக்கும் நடக்க கூடாது என்றும் லாவண்யா தெரிவித்தார்.
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா என்று அவர் கதறி அழுதது விசாரணை நடத்திய போலீசாரையே அதிரச் செய்தது. தொடர்ந்து அழுது கொண்டே இருந்த அவரை அவர்கள் சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.