சென்னை குமரன்நகரில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஐகோர்ட் பெண் வக்கீல் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை போலீசார் மீட்டு கொலையாளியைத் தேடி வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னையில் தனியாக வசிக்கும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு திநகர் ஹபிபுல்லா சாலையில் வசித்து வந்த சாந்தி என்ற வயதான பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இன்னும் கொலையாளிகள் பிடிபடவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து போலீசார் மீள்வதற்குள் 

மேற்குமாம்பலத்தில் தனியாக வசித்து வந்த பெண் வக்கீல் கொலை செய்யப்பட்டது மேலும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

சென்னை மேற்குமாம்பலம் குமரன் நகர், தேவன் காலனி, முத்தாரம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் லட்சுமி சுதா (வயது 58). கடந்த 30 ஆண்டுகளாக சுதா தனது கணவர் பிரபாகரனை பிரிந்து வாழ்ந்து வந்தார். 

இவரது மகன் கார்த்திக் திருமணமாகி பெங்களூருவில் மனைவியுடன் வசித்து வருகிறார். சென்னை ஐகோர்ட் வக்கீலான சுதா கடந்த 5 ஆண்டுகளாக வேலைக்கு பணிக்கு எதுவும் செல்ல வில்லை. வீட்டிலேயேதான் தனியாக வசித்து வந்தார்.

 இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அதே பகுதியில் வசித்து வரும் லட்சுமி சுதாவின் சகோதரி வித்யா அருள்மணி தனது அக்காளை பார்ப்பதற்காக வந்தார். வெகுநேரமாக காலிங் பெல்லை அழுத்தியும் யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வித்யா மூடியிருந்த கதவை தள்ளிய போது திறந்து கொண்டது.

 வீட்டுக்குள் சென்று பார்த்த போது, லட்சுமி சுதா ரத்த வெள்ளத்தில் தலைகுப்புற விழுந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது முதுகு, கழுத்தின் பின்புறம், இடுப்பு, முதுகு என சுமார் 10 இடங்களில் கத்தியால் குத்தியதற்கான காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து லட்சுமி சுதாவை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர் என்பது தெரியவந்தது.

அக்காளின் இந்த கோலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த வித்யா கதறியழுதார். இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அடையாறு துணைக்கமிஷனர் சுந்தரவடிவேலு தலைமையில் குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டது. யாரையும் கவ்விப் பிடிக்க வில்லை. லட்சுமி சுதா வீட்டுக்கு கீழ் அவரது வயதான சித்தப்பா சுந்தரம் (வயது 84) தனியாக தங்கியுள்ளார். 

லட்சுமி சுதாவின் வீட்டுக்குள் இருந்த பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை. நகைகள் எதுவும் திருட்டு போனதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடு திறந்து கிடந்ததால் லட்சுமி சுதாவுக்கு தெரிந்த நபர்கள்தான் வீட்டுக்குள் வந்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

தி.நகரையடுத்து குமரன் நகரில் வீட்டில் பெண் வக்கீல் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

உடல் அழுகிய நிலையில் இருந்தால் துர்நாற்றம் வீசியது. கொலை செய்யப்பட்டு 2 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.