மதுக்கடைகளுக்கு மூடுவிழா….பொங்கல் வைத்து கொண்டாடிய பெண்கள்…
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகத்தில் 3400 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் முன்பு பொது மக்களும், பெண்களும் பொங்கல் வைத்த கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகே 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் மதுக்கடைகள் அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து தமிழகத்தில் நேற்றிலிருந்து, நெடுஞ்சாலையில் இருந்த 3400 மதுக்கடைகள் அடைக்கப்பட்டன.
ஒரு சில இடங்களில் மூடப்படாமல் இருந்த சில கடைகளை பொது மக்கள் முற்றுகையிட்டு அவர்களாகவே அடைத்து வருகின்றனர்.
தென்காசி அருகே மூடப்படாமல் இருந்த மதுக்கடைகளை பெண்களே அடித்து நொறுக்கி அந்த கடைக்கு பூட்டுப் போட்டனர்
இந்த தீர்ப்புக்கு முக்கிய காரணமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாமாகவினர் இனிப்பு கொடுத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றார்கள்.
இந்நிலையில், திருநெல்வேலியில் மூடப்பட்ட மதுக்கடையின் முன்பு ஏராளமான பொது மக்களும், பெண்களும் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதே போன்று தமிழகம் முழுவதும் பொது மக்களும், பெண்களும் தன்னெழுச்சியாக திரண்டு வந்து மதுக் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.