கோவில்பட்டி,
தூத்துக்குடியில் புதிதாக அமையவுள்ள கயத்தாறு தாலுகாவில் தங்களை இனைக்கக் கூடாது என்றும் கோவில்பட்டி தாலுகாவிலேயே தாங்கள் இருக்கிறோம் என்றும் வானரமுட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி தாலுகாவை இரண்டாக பிரித்து கயத்தாறை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய தாலுகாவை உருவாக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதிதாக அமையவுள்ள கயத்தாறு தாலுகாவுடன் வானரமுட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களை இணைக்க கூடாது என்றும், கோவில்பட்டியிலேயே இந்த கிராமங்கள் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்றும் அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி வானரமுட்டி பிரதான சாலையில் அப்பகுதி மக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மகேந்திரன் என்பவர் தலைமை தாங்கினார்.
அப்போது கிராம மக்கள் கூறுகையில், “கோவில்பட்டியில் இருந்து வானரமுட்டி 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் வானரமுட்டியில் இருந்து கயத்தாறு 30 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் அங்கு செல்வதற்கு இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும்.
எனவே பொதுமக்கள் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக தாலுகா அலுவலகத்திற்குச் செல்வதற்கு வீண் அலைச்சல், போக்குவரத்து செலவு, கால விரயம் ஏற்படும்.
எனவே வானரமுட்டி பகுதி கிராமங்கள் தொடர்ந்து கோவில்பட்டி தாலுகாவில் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உறுதியான அறிவிப்பு வெளிவரும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று அம்மக்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணிநேரம் இந்தப் போராட்டம் நடந்ததால் அந்தப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
