kovai and didigul will get heavy rain said met
குமரிக்கடல் பகுதியில் உருவான ஓகி புயல், தென்மேற்கு அரபிக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்து லட்சத்தீவிற்கு தென்கிழக்கே 250 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் அது வடமேற்கு திசையில் நகர்ந்து லட்சத்தீவை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். மேலும், தென்மேற்கு அந்தமான் பகுதியில் வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது இன்று மற்றும் நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும்.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 45 செமீ மழை பெய்துள்ளது.
கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 27 வரை, இயல்பை விட 18% குறைவாக வடகிழக்குப் பருவமழை பெய்திருந்தது. ஆனால், ஓகி புயல் காரணமாக மழை பெய்ததால், இன்றைய நிலவரப்படி, இயல்பை விட 4% குறைவான வடகிழக்குப் பருவமழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையோ மிக கனமழையோ பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடைவெளிவிட்டு மழை பெய்யும்.
தென் தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதனால் குமரிகடல் மற்றும் அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
