கர்நாடக லாரியை சிறைபிடித்த கொங்குநாடு மக்கள் கட்சியினர்; சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...
ஈரோடு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஈரோட்டில் கர்நாடக லாரியை சிறைபிடித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் சாலை மறியல், இரயில் மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் கருப்பு கொடி காட்டியும், கருப்பு சட்டை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் துரைராஜா தலைமையில் நிர்வாகிகள் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை சோதனை சாவடி அருகே நேற்று காலை 9 மணி அளவில் ஒன்று திரண்டார்கள்.
பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி முழக்கங்களும் எழுப்பினார்கள். பின்னர் சாலையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
அப்போது, அந்த வழியாக கர்நாடகத்தில் இருந்து அந்த மாநில பதிவெண் கொண்ட லாரி, மக்காச்சோள பாரம் ஏற்றிக்கொண்டு ஈரோட்டுக்கு வந்துக் கொண்டிருந்தது. இந்த லாரியை கொ.ம.தே.க.வினர் தடுத்து நிறுத்தி சிறைபிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கொ.ம.தே.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது காவலாளர்கள், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அரசிடம் சென்று முறையிடுங்கள். இவ்வாறு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலை மறியலிலோ அல்லது வாகனத்தை சிறைபிடிக்கவோ கூடாது" என்றனர். அதனை ஏற்றுக்கொண்ட கொ.ம.தே.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.