கொடநாடு கொலை கொள்ளை விவகாரம்: இதுவரை விசாரிக்கப்படாத நடராஜன்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை, முன்னாள் கார் டிரைவர் விபத்தில் உயிரிழப்பு, அண்மையில் கணக்கர் தினேஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை என அது நீண்டு கொண்டே இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற போதும், இது வரை எஸ்டேட் மேனேஜர் நடராஜனிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா உயிருடன் இல்லாததாலும், சசிகலா சிறையில் இருப்பதாலும், கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்தில் முடிவெடுக்கும் அனைத்து அதிகாரத்துடன் அவரே இயங்கி வருகிறார்.
தஞ்சை பகுதியை சேர்ந்த நடராசன், சசிகலா குடும்பத்திற்கு நீண்ட காலமாக வேண்டப்பட்டவர் என்பதால், அவருடைய பரிந்துரையின் பேரிலேயே கொடநாடு எஸ்டேட்டில் பணியமர்த்தப் பட்டுள்ளார். ஆரம்பத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தின் நிர்வாகத்தை கவனித்து வந்த இவர், பின்னர் கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டின் அனைத்து விவரங்களையும் முழுவதுமாக அறிந்தவர் என்பதால், அவரை தாம் சிறையில் இருந்து வரும் வரை, கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, இவருக்கு சசிகலா உத்தரவு போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெங்களூரு சென்று சிறையில் உள்ள சசிகலாவை, எஸ்டேட் மேனேஜர் நடராஜன் மூன்று முறை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை போனதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட விசாரணைகளில் பலரையும் விசாரித்துள்ள காவல்துறை, இதுவரை எஸ்டேட் மேனேஜர் நடராஜனை மட்டும் விசாரிக்காதது ஏன்? என்று கேள்வி எழுந்துள்ளது.