ஜல்லிக்கட்டு சர்ச்சை பேட்டி.... கிரண்பேடிக்கு எதிர்ப்பு - புதுவை சட்டசபைக்குள் நுழைய மாணவர்கள் முயற்சி
கிரண்பேடி ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேட்டி அளித்ததற்கு புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆளுநர் மாளிகை முன்பு திடீரென திறன் மாணவர்கள் கூட்டம் மாளிகைக்குள் நுழைய முயன்றது.
கிரண்பேடி ஐபிஎஸ் அதிரடிக்கும் பரபரப்புக்கும் பெயர் போனவர். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது திஹார் சிறையில் சீர்த்திருத்தங்கள் செய்து நல்ல பெயர் வாங்கினார். பாஜகவில் இணைந்த அவர் புதுச்சேரி மாநில லெப்டினெண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் சில்லரை சீர்த்திருத்தங்கள் மூலம் பாண்டிச்சேரி மக்களிடம் வரவேற்பை பெற்ற அவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் அரசை மீறி தனது அதிகாரத்தை காட்டத்துவங்கினார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மீறி ஆட்சி அதிகாரத்தில் தலையிடும் வேலையை செய்து வந்தார்.
இது அத்துமீறல் என பாண்டிச்சேரி காங்கிரஸ் அமைச்சர்கள் கண்டித்தனர். பத்திரிக்கைகள் அவரது செயலை விமர்சித்தன. இதற்காக பத்திரிக்கைகள் மேல் பாய்ந்த கிரண் பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை காட்டிலும் தனது வானலாவிய அதிகாரம் இருப்பதாக டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
இப்படி சம்பந்தமில்லாத விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் கிரண்பேடி நேற்று இந்தியா டுடே கருத்தரங்கில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கம் போல் அப்பீல் இல்லாமல் ஆஜராகி ஆர்.ஜே.பாலாஜியிடம் மூக்குடைப்பட்டார்.
இதன் எதிரொலியாக பாண்டிச்சேரியிலும் கிரண்பேடிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இன்று திடீரென கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திடீரென கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
இதை சற்றும் எதிர்பாராத போலீசார் மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் மாணவர்கள் கிரண்பேடியை கண்டித்து கோஷமிட்டனர். அவர் கருத்தை வாபஸ் வாங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷமிட்டனர்.
கவர்னர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர். இதனால் போலீசாருக்கும் , மாணவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.