kerala forestry trying to occupy TN borders

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த எல்லைப் பகுதியில் கேரள வனத்துறையினரும், காவல் துறையினரும் அத்துமீறி, தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தேனியை அடுத்த கம்பம்-கம்பம் மெட்டு பகுதியில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த பிப்ரவரியில் திடீரென கேரள சுங்கத் துறையினர் சோதனைச் சாவடி அமைக்க தாற்காலிக கன்டெய்னரை நிறுத்தினர். 

அதை தடுத்த தமிழக வனத்துறையினர் தாக்கப்பட்டனர். இப்பிரச்னை தொடர்பாக தேனி, இடுக்கி மாவட்ட உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், முறையான ஆவணங்களுடன் தமிழக-கேரள எல்லைப் பகுதியை இரு மாநில அதிகாரிகளும் கூட்டாக நில அளவீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து தமிழக-கேரள அதிகாரிகள் கூட்டாக நில அளவைப் பணியை தொடங்கினர்.
அப்போது, தமிழக வனத்துறையின் பல நூறு ஏக்கர் நிலங்களை கேரளாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் அரசு ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டியும், ஏலக்காய், மிளகு விவசாயம் செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும் கேரள காவல்துறையும், வனத்துறையும் ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் 6 இடங்களில் நில அளவை கல்லை கேரளா ஆக்கிரமித்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்த கடந்த மாதம் 7-ந் தேதி இரு மாநில அதிகாரிகளும் கூட்டாக இணைந்து எல்லைப் பகுதியில் நிலஅளவை பணியை மேற்கொண்டனர். அதன்பின் ஜுன் 12-ந் தேதி நவீன முறையில் நில அளவை கற்கள் ஊன்றப்பட்டன.

மந்திப்பாறை, நாவல் பள்ளம் இடத்தில் தொடங்கி கல்லுவேலி எஸ்டேட் வரை எல்லையை நிர்ணயம் செய்து 14 நில அளவை கற்கள் ஊன்றப்பட்டன. 

இந்நிலையில் கேரள வனத்துறையினர் கடந்த மாதம் ஊன்றப்பட்ட கற்களை நேற்று பிடுங்கி எறிந்தனர். இதைத் தடுத்த தமிழக வனத்துறையினரை அவர்கள் விரட்டி அடித்தனர். இதனால் தமிழக-கேரள எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.