kaveri pushkara festival started supebly after 144 years

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் காவிரி மகா புஷ்கர விழா தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் கோலாகலமாக தொடங்கியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தியாவில் உள்ள 12 புண்ணிய நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் புஷ்கரம் செய்வார்.

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நதி என 12 ராசிகளுக்கும் 12 நதிகள் புஷ்கர நதிகளாக கூறப்படுகின்றன.

இந்த முறை காவிரி நதியில் துலாக்கட்டத்தில் புஷ்கரம் செய்கிறார். 144 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நதியில் புஷ்கரம் செய்வதால், மகா புஷ்கர விழாவைக் கொண்டாட மயிலாடுதுறையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இதற்காக, மயிலாடுதுறை காவிரி ஆற்றில் பெரிய நீர்த்தேக்கம் கட்டப்பட்டு, அங்கு காவிரி அன்னை சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்ச்சியாக நாட்டில் உள்ள 12 புண்ணிய நதிகளில் இருந்து நீர் எடுத்துவரப்பட்டு, மஹா யாஹங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா நடைபெறும் துலாக்கட்ட பகுதிகள் நேற்றிரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பின்னர் புஷ்கர யாகம் செய்யப்பட்டு, புனித நீர் துலாக்கட்ட நீர்த் தேக்கத்தில் சேர்க்கப்பட்டு அதன் பின்னர் புனித நீராடல் முறைப்படி தொடங்கியது.

முன்னதாக மயூரநாதர், ஐயாறப்பர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலாகட்ட தெற்கு கரையை வந்தடைந்தனர். இதைப்போல வள்ளலார், படித்துறை காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலா கட்டத்தை அடைந்தனர்.

மேலும், பரிமளரெங்கநாதர் கோவிலில் இருந்து சுகந்தவனநாதர், பூதேவி, ஸ்ரீதேவியுடன் புறப்பட்டு காவிரி யானைக்கால் படித்துறையை வந்தடைந்தார். பின்னர் துலாகட்டத்தில் 4 கோவில்களின் அஸ்திரதேவர்களுக்கும், யானைக்கால் படித்துறையில் தீர்த்தபேரருக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது.

அப்போது துலாகட்டத்தின் வடக்கு கரையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஆதீனங்களும், கிரீஸ் நாட்டு இளவரசி ஐரீன் ஆகியோரும் புனித நீராடி சாமி வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணியளவில் ஆன்மிக ஊர்வலம் மயிலாடுதுறை கேதாரநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு காவிரி துலா கட்டத்தை அடைந்தது.

மேலும் மயிலாடுதுறை புஷ்கர விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த புஷ்கர விழா வரும் 24ஆம் தேதி வரை நடைபெறும்.