சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவோம் – விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவிகள் உறுதிமொழி…
நாமக்கல்லில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவோம் என்று மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்.
சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றனும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது. அதில் ஒன்று நேற்று நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி மற்றும், விழிப்புணர்வு ஊர்வலம்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிக்கு உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிக்னர் ஆணையர் (அட்வகேட் கமிஷனர்) பொன்ராம் ராஜா பங்கேற்று விழிப்புணர்வு ஊர்வலத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலம் அண்ணாசிலை, பரமத்தி சாலை, பூங்கா சாலை, பேருந்து நிலையம், அரசு தலைமை மருத்துவமனை வழியாக மீண்டும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தை வந்தடைந்து நிறைவுற்றது.
இதில் மகளிர் திட்ட இயக்குனர் மணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்திரசேகரன், நாமக்கல் உதவி ஆட்சியர் ராஜசேகரன், தாசில்தார் ராஜ்மோகன், செஞ்சிலுவை ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ் கண்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் என 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவரும் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவோம் என்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றதோடு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.