உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்க வேண்டும் - அப்படியே கர்நாடக முதல்வர்கிட்ட சொல்லிடுங்க விஷால் சார்...
திண்டுக்கல்
உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்க வேண்டும் என்றும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், அவர் பின்வருமாறு கூறினார்.
"நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டனர். வருகிற பொதுத் தேர்தலில் புது கட்சிகள் ஏராளமாக களமிறங்கும்.
உள்ளாட்சித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் வரும்போது எல்லா வகையிலும் எனது அறிவிப்புகள் இருக்கும். வருகிற பொதுத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும்.
ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பயணத்தை உன்னிப்பாக கவனிப்பேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வரும் அனைவரையும் வரவேற்கிறேன்.
பேருந்து கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு எல்லா வகையிலும் நன்மை செய்தால் சந்தோஷமான வாக்காளராக நானும் இருப்பேன்.
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்பட்டால் நல்லது. உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சட்டத்தை மீறி யாரும் செயல்பட முடியாது.
கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போராடிவரும் விவசாயிகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. மற்ற துறைகளுக்கு சலுகைகள் கொடுக்கும்போது, விவசாயிகளுக்கு ஏன் சலுகைகள் கொடுக்க முடியாது?
காவிரிநீர் பிரச்சனையில் நடிகர்கள் ரஜினி, கமல் குரல் கொடுத்தால் நல்லது. ஏன் குரல் கொடுக்கவில்லை? என்று என்னால் கேட்க முடியாது" என்று அவர் கூறினார்.