கார் விபத்தில் சிக்கினார் டிடிவி ஆதரவாளர் புகழேந்தி - தனியார் மருத்துவமனையில் அனுமதி...!
திண்டுக்கல்லில் நடந்த சாலை விபத்தில் கர்நாடக அதிமுக செயலாளரும் டிடிவி ஆதரவாளருமான புகழேந்தி படுகாயம் அடைந்தார். கை கால்களின் எழும்பு முறிவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக அதிமுக மாநில செயலாளராக உள்ளவர் புகழேந்தி. இவர் சசிகலாவுக்கு தீவிர விசுவாசியாக இருந்து வந்தார். அவர் சிறைக்கு சென்றதும் அவரால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு வலது கையாக மாறினார்.
டிடிவி அணியில் ஓர் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பிடித்தவர்களில் இவரும் ஒருவர். டிடிவி தினகரனை எடப்பாடி தரப்பினர் குற்றம் சாட்டினால் முதல் ஆளாக குரல் கொடுப்பவர் புகழேந்தி என்றே சொல்லலாம்.
இந்நிலையில், புகழேந்தி காரில் திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் புகழேந்தியின் கை, கால்களில் எழும்பு முறிந்து படுகாயமடைந்தார். இதையடுத்து புகழேந்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.