காரைக்குடி - பட்டுக்கோட்டைக்கு தினசரி பயணிகள் இரயில்; வரும் 14-ஆம் தேதி முதல் இயக்கம்...
சிவகங்கை
வரும் 14-ஆம் தேதி முதல் காரைக்குடி - பட்டுக்கோட்டைக்கு தினசரி பயணிகள் இரயில் இயக்கப்பட உள்ளது என்று இரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை வரும் 14-ஆம் தேதி முதல் தினசரி பயணிகள் இரயில் இயக்கப்பட உள்ளது.
ஆறு பெட்டிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.10 மணியளவில் சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு, காரைக்குடியிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட இந்த இரயில், கண்டனூர் புதுவயல், பெரியக்கோட்டை, வளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயாங்குடி, பேராவூரணி, ஒட்டாங்காடு வழியாக பிற்பகல் 12.45 மணிக்கு பட்டுக்கோட்டைக்குச் சென்றடைந்தது.
பின்னர், அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு அதே வழித்தடத்தில் மாலை 6 மணியளவில் காரைக்குடி வந்தடையும் வகையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ரூ.25, அறந்தாங்கி, பேராவூரணிக்கு ரூ.10 என பயணக் கட்டணம் இருக்கும் என்றும், இந்த இரயில் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் தினந்தோறும் இயக்கப்பட உள்ளது என்று இரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.