கன்னியாகுமரியில் கடல் சீற்றம் - படகு போக்குவரத்து நிறுத்தம்
கடந்த 12ம் தேதி சென்னையை வர்தா புயல் கரை கடந்து சென்றது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன. லட்சக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும், ஆயிரக்கணக்கான டிரான்ஸ்பார்மர்களும், நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதம் அடைந்தன.
இதை தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் உருவாகி இருப்பதாக, வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. புயல் வலுவிழந்தால், தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தது.
இந்நிலையிர்ல, இன்று அதிகாலை முதல் கன்னியாகுமரியில் பலத்த காற்றும், கடல் சீற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று, கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.