சீருடையோடும், இல்லாமலும் கூட நல்ல குடிமக்கள் மிளிருவார்கள் !! காவலர்களை பாராட்டி கமல் !!!
நல்ல குடிமகன் சீருடை அணிந்தாலும் அணியாவிட்டாலும் பிரகாசிப்பார்கள். காவல் பணியுடன் மீட்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு நன்றி என மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நடிகர் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாள்களாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், தாழ்வானப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. அதேபோல கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சில இடங்களில் சாலைகளிலும் மரம் முறிந்து கிடப்பதினால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைக் கருத்தில் கொண்டு, காவலர்கள் மழை மீட்புப் பணியில் ஈடுபடுமாறு காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவையடுத்து காவல்துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக தேங்கி நின்ற மழை நீரை அகற்றினர். இதேபோல் பல்வேறு இடங்களில் சாலையில் விழுந்து கிடந்த மரங்களையும் போலீஸார் வெட்டி அகற்றினர்.
காவலர்களின் இந்த பணிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள கமலஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் , நல்ல குடிமகன் சீருடை அணிந்தாலும் அணியாவிட்டாலும் பிரகாசிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
காவல் பணியுடன் மீட்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு நன்றி என்றும். காவலர்களைப் போல் பணியாற்ற தமிழர்கள் முன்வரவேண்டும் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பதிவில், இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவ வேண்டும் என்றும், ஆபத்திற்கு பாவமில்லை என்று கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.