தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி செங்கலபட்டு அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செங்கல்பட்டுபழைய பஸ் நிலையம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
இதில், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். மத்திய மற்றும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு சட்டக்கல்லூரி, அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் திரண்டனர்.
அங்கு மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்தும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தியும், பீட்டா அமைப்புக்கு தடை செய்யக்கோரியும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், மாணவர்கள் அனைவரும், ஊர்வலமாக சென்று, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புலிப்பாக்கம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து ஏற்பட்டது. பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரசம் பேசினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போலீசார், மறியலில் ஈடுபட்ட மாணவர்களை, வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், சுமார் ஒரு மணிநேரம் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படடது.
மறைமலைநகர் இளைஞர்கள் நல சங்கம் சார்பில் மறைமலைநகர் பஸ் நிலையத்தில் மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மறைமலைநகர் திமுக நகர செயலளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு, ஆதரவு தெரிவித்து பேசினர்.
இதைதொடர்ந்து செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில் உள்ள ஐடி ஊழியர்கள் 5000க்கு மேற்பட்டோர், தங்களது வேலைகளை புறக்கணித்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது, பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
