தலைமை செயலகத்தில் வேலை வாங்கித்தர லஞ்சம் - அரசு ஊழியரை மடக்கி பிடித்தது லஞ்ச ஒழிப்புத்துறை
தலைமை செயலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி லஞ்சம் பெற்றபோது அரசு ஊழியர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
ஊட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்தார். அப்போது சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறையில் பணியாற்றும் நந்தகுமார் எனபவர் பழக்கமாகியுள்ளார்.
தலைமைசெயலகத்தில் வேலை வாங்கித்தருகிறேன் அதற்கு ரூ.6 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த மணிகண்டன் இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் மணிகண்டன் நந்தகுமாரிடம் பேசியுள்ளார். நந்தகுமார் முதல்கட்டமாக ரூ.15 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அதை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொண்டுவந்து தருமாறு கூறியுள்ளார்.
அதன் படி ரசாயனம் தடவப்பட்ட ரூ.15 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் மணிகண்டனிடம் கொடுத்து மறைந்து நிற்க மணிகண்டனிடமிருந்து நந்த குமார் ரூ.15 ஆயிரத்தை பெறும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.