சென்ட்ரல் ஜெயில் அருகே கைவரிசை காட்டிய திருடர்கள்... கடையில் துளைபோட்டு மூன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த துணிகரம்...
சென்னை, புழல் அருகே கடையில் துளைப்போட்டு மூன்றரை கிலோ தங்கம், நான்கரை கிலோ வெள்ளி நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கொளத்தூரில் ஸ்ரீநகர் அனெக்ஸ் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முகேஷ்குமார். இவர் கடந்த 15 வருடங்களாக புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோயில் தெருவில் மகாலட்சுமி தங்க மாளிகை என்ற நகைக்கடை நடத்தி வருகிறார்.
தாங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், விற்வனை செய்து வருகிறார். மேலும், அடகு வைத்து பணம் தருவது, மாதாந்திர நகை சீட்டும் நடத்தி வருகிறார். இந்த கடையில் முகேஷின் உறவினர்கள் உட்பட 5-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
காலை 9 மணிக்கு கடையைத் திறக்கும் முகேஷ் மற்றும் ஊழியர்கள், மதியம் 1 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு சாப்பிட சென்று விடுவர். பின்னர், மாலை 4 மணியளவில் கடை திறக்கப்பட்டு இரவு மூடப்படும்.
இதேபோல் நேற்றும் முகேஷ் மற்றும் ஊழியர்கள் 1 மணிக்கு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். மீண்டும் மாலை 4 மணிக்கு கடையைத் திறந்த உள்ளே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடையினுள், கன்னாடி அலமாரியில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது. நகை பெட்டிகள் சிதறிக் கிடந்தன. நகைக் கடை தளத்தில் ஒருவர் உள்ளே புகும் அளவுக்கு துளை போடப்பட்டிருந்தது. இதன் வழியாக இறங்கிய திருடர்கள், கடையில் இருந்த நகைகளைக் கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, முகேஷ், ராஜமங்கலம் போலீசில் புகார் செய்தார். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கடையின் உரிமையாளர் பாண்டுரங்கனிடம் விசாரித்தனர். முகேஷ் குமாரின் நகைக்கடைக்கு மேலே பாண்டுரங்கனுக்கு சொந்தமான மற்றொரு கடை உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ராஜேஷ் என்பவர், அலுவலகம் நடத்தப்போவதாக கூறி அந்த கடையை வாடகை பேசி எடுத்திருந்ததாக கூறினார்.
நகையை கொள்ளை அடிக்கும் திட்டத்துடன் வந்த அவர்கள், நகைக் கடைப் பூட்டிருக்கும் நேரத்தில், நகைக்கடைக்கு ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சிறிது சிறிதாக துளைபோட்டு வந்துள்ளனர். நேற்று மதியம், முகேஷ் மற்றும் ஊழியர்கள் கடையைப் பூட்டிவிட்டு சாப்பிட சென்றதும், தங்கள் கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். மாடியில் உள்ள கடையில் இருந்து போடப்பட்ட துளை வழியாக நகைக்கடைக்குள் இறங்கி அங்கிருந்து
தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கெள்ளையடித்து விட்டு அதன் வழியாகவே மாடியில் உள்ள கடைக்குச் சென்று அவர்கள் தப்பியுள்ளனர். தப்பியோடியவர்களைப் பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.