பெண் இரயில் பயணியிடம் இருந்து நகை பறிப்பு; 5 சவரன் தாலியுடன் மர்ம நபர் மாயம்...
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பெண் இரயில் பயணியிடம் இருந்து ஐந்து சவரன் தாலிச் சங்கிலையை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பியோடிவிட்டார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம், வர்க்கலை பகுதியைச் சேர்ந்தவர் திபுகுமார் (50). தொழில் செய்துவரும் இவருக்கு சுதர்சனா (45) என்னும் மனைவி உள்ளார்.
மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திபுகுமார், தன்னுடைய மனைவி மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டார். புனலூர் – மதுரை பாசஞ்சர் இரயிலில் முன்பதிவு பெட்டியில் இவர்கள் அனைவரும் பயணம் செய்தனர்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் கோவில்பட்டி அருகே குமாரபுரம் இரயில் நிலையத்தில் கோவை – நாகர்கோவில் விரைவு இரயில் கடந்து செல்வதற்காக, புனலூர் – மதுரை பாசஞ்சர் இரயில் நிறுத்தப்பட்டது.
அப்போது, அந்த இரயிலில் ஜன்னல் ஓரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த சுதர்சனா கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தாலிச் சங்கிலியை மர்மநபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.
உடனே பதற்றத்துடன் விழித்த கொண்ட சுதர்சனா ‘திருடன்... திருடன்...‘ என்று அலறினார். உடனே திபுகுமார் மற்றும் பயணிகள் மர்ம நபரை பிடிக்க முயற்சித்தனர். ஆனாலும், அந்த திருடனை பிடிக்கமுடியவில்லை.
அதன்பின்னர் சிறிது நேரத்தில் இரயில் அங்கிருந்து புறப்பட்டது. இதுகுறித்து திபுகுமார் கோவில்பட்டி இரயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில், தூத்துக்குடி இரயில்வே காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர்.
இரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து 5 சவரன் நகையைப் பறித்த சம்பவம் இரயில் பயணிகளிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.