ஷட்டரை உடைத்து 60 கிலோ நகை கொள்ளை - நகைக்கடைகளை குறி வைக்கும் கொள்ளையர்கள்
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி - முருகன் குறிச்சி சாலையில் அழகர் ஜூவல்லரி என்ற நகை கடை உள்ளது. இதன் உரிமையாளர் தாமோதரன். இந்த கடைக்கு மதுரை, கோவில்பட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கிளைகள் உள்ளன.
3 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் அனைத்து தளங்களிலும் தங்கம், வெள்ளிகளால் செய்யப்பட்ட அனைத்து டிசைன் நகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மொட்டை மாடியில், ஷட்டர் அமைத்து, பூட்டு போட்டுள்ளனர். தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டால், அங்குள்ள தொட்டியை சுத்தம் செய்ய ஊழியர்கள் செல்வார்கள். அப்போது, மட்டும் ஷட்டர் திறக்கப்படும். இங்கு பகல் மற்றும் இரவு காவல் பணிக்கு 2 பேர் உள்ளனர்.
மேலும், இந்த நகைக்கடை அருகில், புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்படுகிறது. அதற்கான கட்டுமான பணிகள், இரவு - பகலாக நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும், நகைக்கடையை பூட்டி கொண்டு அனைவரும் வீட்டுக்கு சென்றனர்.
இன்று காலை வழக்கம்போல் கடையை திறந்தனர். அப்போது, அங்கிருந்த ஷோ கேஸ்கள் திறந்துகிடந்தன. அதில் இருந்த நகைகள் மாயமானதை கண்டு, ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே கடை உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர் அங்கு சென்றார். அப்போது, மேல் மாடியில் உள்ள ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. சுமார் 60 கிலோ தங்கம், கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
தகவலிறிந்து பாளையங்ககோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
அதில், அருகில் கட்டுமான பணி நடக்கும் கட்டிடத்தின் மீது ஏறிய மர்மநபர்கள், நகைக்கடை மொட்டை மாடியில் குதித்து, அங்குள்ள ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர், ஒவ்வொரு தளமாக சென்று, அங்கு ஷோகேஸில் இருந்த நகை, பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த பல்வேறு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
இதையடுத்து மோப்பா நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய், சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. கைரேகை நிபுணர்கள், அங்கிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் , கடை ஊழியர்கள், 2 காவலாளிகளிடம் விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், அருகில் கட்டுமான பணி நடக்கும் கட்டிடத்தில் இருந்து மர்மநபர்கள் ஏணி மூலம் இறங்கியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.
கடையில் நுழைந்த மர்மநபர்கள், அங்குள்ள அலாரம் மற்றும் சிசிடிவி கேமராக்களுக்கான மின்சார வயர்களை துண்டித்துவிட்டனர். பின்னர், அவர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.