மலைப்பாதையில் போட்டி போட்டு செல்லும் ஜீப் ஓட்டுநர்கள்; தொடரும் விபத்துகளால் கை, கால் இழந்த தொழிலாளர்கள்…
தேனி
கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் மலைப்பாதையில் போட்டிப் போட்டுக் கொண்டு செல்வதால் ஏற்படும் விபத்துகளில் தொழிலாளர்கள் கை, கால்களை இழந்து தவிக்கின்றனர்.
தேனி மாவட்டம், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், காபி தோட்டங்களுக்கு பெண் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வருகின்றனர்.
குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், அடிமாலி, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தினமும் 200–க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
காலையில் செல்லும் இவர்கள் மாலையில், அதே ஜீப்புகளில் வீடு திரும்புகின்றனர். இந்த ஜீப்புகளில் அளவுக்கதிகமாக தொழிலாளர்களை ஏற்றிச் செல்லப்படுவதால் கை, கால்களை வெளியே தொங்கவிட்டபடி ஆபத்தான பயணத்தை தொழிலாளர்கள் மேற்கொள்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மலைப்பாதையில் கூட ஜீப்புகள் அசுர வேகத்தில்தான் செல்கின்றன என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகின்றனர்.
ஜீப் டிரைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு, கொண்டை ஊசி வளைவுகளை கடக்கும்போது விபத்தில் சிக்குகின்றனர். கடந்த காலத்தில் மட்டும் நடந்த விபத்துக்களில் பலர் உயிரிழந்துள்ளனர். சில தொழிலாளர்கள் கை, கால்களை இழந்திருக்கின்றனர்.
விபத்து நடந்தால் மட்டுமே காவலாளர்கள் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர் என்று காவலாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இதுகுறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவர் கூறியது:
““கேரளாவுக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகளில் 12 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
ஜீப்புகளுக்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
ஓட்டுநர்கள் காக்கி சீருடை அணிந்திருக்க வேண்டும்.
மலைப்பாதையில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்” உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.
ஆனால், இதனை பெரும்பாலானோர் கடைபிடிப்பது கிடையாது. ஒரு ஜீப்பில் 20 பேர் வரை ஏற்றுகின்றனர். அசுர வேகத்தில் ஜீப்புகளில் செல்கின்றனர். ஜீப்புகளை முறையாக பராமரிக்காததால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்போது பெண் தொழிலாளர்களை வைத்து ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக நடவடிக்கை எடுக்க காவலாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.