Jayalalitha is one who brought me up - Chief Minister Edappadi Palanicachi replied to Ops
நீலகிரி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான் பார்த்து வளர்ந்தவர் என்று பேசிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு, “என்னை வளர்த்தவர் ஜெயலலிதா ஒருவர் தான்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சாட்டையடியாய் பதிலளித்தார்.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் திண்டுக்கல்லில் கடந்த 17-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான் பார்த்து வளர்ந்தவர். அவர் எனக்கு நிதி அமைச்சர் பதவி தருகிறேன் என்று கூறுவது நகைப்பாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இதற்கு, ஊட்டி மலர்க்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ளார்.
“நேற்று முன்தினம் ஒருவர் (ஓ.பன்னீர்செல்வம்) குறிப்பிட்டதாக பத்திரிகையிலே ஒரு செய்தியை பார்த்தேன். அதில், ஒருவரால் நான் பார்த்து வளர்க்கப்பட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அது தவறு. புரட்சித்தலைவி அம்மா என்ற தெய்வத்தால் நான் வளர்க்கப்பட்டவன். 1974-ஆம் ஆண்டில் பொது வாழ்க்கையில் நான் ஈடுபட்டேன். அப்போது எம்.ஜி.ஆரோடு அதிமுகவில் என்னை நான் இணைத்துக் கொண்டேன்.
அப்பொழுதே என்னுடைய சிற்றூரான சிவன்மலை கிளை கழகச் செயலாளராக என்னுடைய கட்சிப் பணியைத் தொடங்கினேன், சிறப்பாக கட்சிப்பணி ஆற்றி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா பேரவையை 1985-ஆம் ஆண்டிலே என்னுடைய பகுதியிலே உருவாக்கி ஜெயலலிதா மனதிலே இடம் பெற்றவன் நான்.
1989-ம் ஆண்டு அவர் தன்னந்தனியாக சட்டமன்ற தேர்தலை சந்தித்தபோது, சேவல் அணியில் நான் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே போட்டியிட்டு ஜெயலலிதா செல்வாக்கால் அன்று எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவன்.
அதற்கு பிறகு, 1991-ஆம் ஆண்டில் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் வெற்றி பெற்றவன். பிறகு 1993-ஆம் ஆண்டில் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தினுடைய தலைவராகவும், சேலம் மாவட்ட திருக்கோவில் வாரியத்தினுடைய தலைவராகவும் நான் சிறப்பான முறையிலே பணியாற்றினேன்.
திருச்செங்கோடு நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. நான் வேட்புமனு செய்யாமலேயே திருச்செங்கோடு நாடாளுமன்ற வேட்பாளராக அதிமுகவில் போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதா தந்தார். அப்பொழுது நான் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினேன்.
அதற்கு பிறகு 2011-ஆம் ஆண்டில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே போட்டியிட்டு, வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையிலே நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட நான் பணியாற்றினேன்.
2016 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஜெயலலிதா தலைமையிலே நல்ல ஆட்சி அமைக்கப்பட்டது. அவரது அமைச்சரவையிலே நான் நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகங்கள் துறை, கூடுதலாக பொதுப்பணித் துறையையும் எனக்கு வழங்கினார். நான் கழகத்திலே பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கின்றேன்.
1991-ஆம் ஆண்டில் சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்து இருந்தபொழுதே மாவட்ட கழகத்தினுடைய செயலாளராக இருந்து பணியாற்றியவன். அதேபோல கழகத்திலே கொள்கை பரப்பு செயலாளராகவும், அமைப்புச் செயலாளராகவும் இருந்து பணியாற்றி இருக்கிறேன்.
ஜெயலலிதா என்னை தலைமை நிலையச் செயலாளராகவும், இப்பொழுது மாவட்ட செயலாளராகவும் பணியாற்றும் வாய்ப்பினை அளித்தார். என்னை வளர்த்தவர் ஜெயலலிதா ஒருவர் தான் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் மட்டுமல்ல, இங்கே மேடையிலே இருக்கின்ற அத்தனை கழக தொண்டர்களையும், இங்கே வருகை தந்துள்ள அத்தனை கழக நிர்வாகிகளையும் உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் சாரும்” என்று அவர் பேசினார்.
