முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எப்போதும், தெய்வத்தின் துணை இருக்கிறது. அவர் பூரண குணமடைவார் என சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் இடைவிடாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களில் யாகம், பூஜை, தேர் இழுத்தல், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர், பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்களும், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்குறித்து விசாரித்து செல்கின்றனர்.
அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நிருபர்களிடம் கூறியதாவது:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்பதற்காக டாக்டர்களை உள்ளே சந்திக்க சென்றேன். டாக்டர்கள் சிரித்த முகத்தோடு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். சந்தோஷமாகவும், நல்ல சுகத்தோடும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்கள். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எப்போதும் தெய்வத்தின் துணை இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம். நாங்கள் மிக சந்தோஷமாக இருக்கிறோம். ஒரு குடும்பத்தில் உள்ள தாயை போல் முதலமைச்சர் ஜெயலலிதாவை எல்லாரும் பார்க்கிறார்கள். நாங்கள் எங்கு சென்றாலும் எங்களிடம் முதலமைச்சர் உடல் நலம் குறித்து கேட்கிறார்கள். அவர் மீது மக்கள் வைத்திருக்கும் பாசம் வேறு எந்த தலைவருக்கும் கிடைக்காது.
முதலமைச்சர் ஜெயலலிதா நீண்ட ஆண்டுகள் நன்றாக இருப்பார்கள். மக்களுக்கு சேவை செய்யும் ஜெயலலிதாவுக்கு எந்த குறையும் இறைவன் வைக்க மாட்டார். நாங்கள் இப்போது தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்கிறோம். தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் மாபெரும் வெற்றியை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
