முதலமைச்சர் ஜெயலலிதா, தனக்கு வேண்டிய உணவை கேட்டு சாப்பிடுகிறார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமைனை மருத்துவ குழுவினர், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயலலிதா, தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த 21ம் தேதி, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், முதல்வருக்கு அளிக்கும் சிகிச்சை, அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின், எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், சிறப்பு சிகிச்சை பிரிவில் இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு, தனக்கு தேவையான உணவை, அவரே கேட்டு சாப்பிடுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி அவர், விரைவில் வீடு திரும்புவார் என்ற அறிக்கையை ஓரிரு நாட்களில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.