கந்துவட்டி தொடர்பாக பொது மக்கள் தைரியமாக புகார் கொடுக்கணும்! அமைச்சர் ஜெயகுமார் அதிரடி!
கந்துவட்டி தொடர்பாக பொது மக்கள் தைரியமாக புகார் அளித்தால் அதன் மீது கடுமையான நடிவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் உறுதி அளித்துள்ளார்.
கந்துவட்டி கொடுமை தாங்க முடியாத இசக்கிமுத்து என்பவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தனத மனைவி மற்றும் இரண்டு பச்சிளங்குழந்தைகளுடன் தீக்குளித்து மரணமடைந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இரண்டு குழந்தைகளும் தீயில் கருகி இறந்துபோனதை பார்த்து மனம் பதைத்துப்போன பொது மக்கள் கந்துவட்டிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே நேற்று இரவு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமாரின் படத் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்சன்ஸ் . நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்த அசோக்குமார் கந்துவட்டி கொடுமை காரணமாக திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கந்துவட்டியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை பைனான்சியர் அன்பு செழியனிடம் வாங்கிய பணத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பல லட்சங்கள் வட்டியாக கொடுத்திருந்தும் தொடர்ந்து கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் கேவலமாக அன்பு செழியின் மிரட்டுவதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தை அடுத்து கந்துவட்டி சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கந்துவட்டி குறித்து பொது மக்கள் தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்றும், அப்படி புகார் கொடுக்கும் பட்சத்தில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.