ஜல்லிக்கட்டு பிரச்சனை முடியும் வரை பெப்சி கோக் பானங்களை வாங்கி விற்க மாட்டோம் என வணிகர்கள் திடீர் என முடிவு எடுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பீட்டா எதிர்ப்பாக மாறி , பீட்டா அமெரிக்க நிறுவனம் என்பதை அறிந்து கொள்ளும் நிலைக்கு மறியுள்ளது. ஜல்லிக்கட்டு ஏதோ சில மாவட்டத்தில் நடக்கும் ஒன்று என்று நினைத்திருந்த , பிரச்சாரம் செய்து வருகிறவர்களின் சதியை முறியடிக்கும் விதமாக இல்லையில்லை இது விவசாயத்தோடு சம்பந்தப்பட்டது, காளைகள் இனத்தை பாதுகாக்கும் விஷயம், தமிழகத்தின் பால் உற்பத்தி சம்பந்தப்பட்ட ஒன்று என்று தமிழகத்தின் கடைகோடி இளைஞர்களும் புரிந்து கொண்டுள்ளனர்.

அந்நிய நிறுவங்கள் எப்படியெல்லாம் தமிழகத்தை சுரண்டி பிழைக்க பாரம்பரியத்தை அழிக்க முயல்கிறது என்பதை புரிந்துகொண்ட இளைஞர்கள் , வணிகர்கள் , தமிழ் மக்கள் அந்நிய நிறுவனங்களுக்கு சொந்தமான பொருட்களை, குளிர்பானங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

இது தீயாக தமிழகம் முழுதும் பரவி வருகிறது. கோக், பெப்சியை புறக்கணிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர். இதற்கு முதல் முயற்சியை தேனி மாவட்ட வணிகர்கள் எடுத்துள்ளனர். தேனி மாவட்டம் முழுதும் ஜல்லிக்கட்டு பிரச்சனை தீரும் வரை கோக் , பெப்சி போன்ற அந்நிய குளிர் பானங்களை வாங்கி விற்க மாட்டோம் என்று முடிவெடுத்துள்ளனர்.

இந்த முடிவு மற்ற மாவட்ட வணிகர்களை சென்றடையுமானால் அது தமிழகம் முழுதும் பெப்சி, கோக் விற்பனை நிறுத்தும் இதன் மூலம் போராட்டம் வேறு வடிவத்தை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.